வே(மே)ளாண்மை
இதய நிலத்தை
ஆழ உழுதிடு
பொறாமைக் களை எடு
இயலாமைக் குப்பை அகற்றி
சினமெனும் கோரைகள் பிடுங்கு
அகந்தைப் புல் நீக்கி
பகுத்தறிவு கலந்து பண்பை விதை.
நேச உரமிட்டு
விரோதப் பூச்சிகளை அழி
கருணை நீர் பாய்ச்சு
புறம் பேசும் அகத்திற்கு
“வரம்”பென்னும் வரப்பிடு
சமத்துவ வேலி இட்டு
இன மத மொழி ஆடுகளை
வெளி நிறுத்து
பேராசையென்னும் அதிகப்படி நீரை
‘திருப்தி” எனும் வாய்க்காலில்
திருப்பி அனுப்பு
தரிசு மனத்தையும்
கரிசலாய் ஆக்கி விடு.
சேறான இதயம்
நீராய்த் தெளிய விடு.
அன்புப் பயிர் பொன்னாய் விளையும்.
மனித நேயம் அறுவடை செய்
எக்காலமும்.
*******

